சம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நயன்தாரா – அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம்.

ஆனால் நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரின் சம்பளம் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது. நயன்தாரா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கதாநாயகியாக அறிமுகமான புதிதில் இவரது சம்பளம் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் குவித்ததால் சம்பளம் மளமளவென உயர்ந்தது.

தற்போது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘கைதி எண்.150’ படத்தில் நடிக்க அவரை அணுகி ரூ.3½ கோடி சம்பளம் தருவதாக பேசினார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்து விட்டார்.

பழைய மாதிரி காதல் கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அவர் நடித்துக் கொண்டு இருக்கும் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய மூன்றுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.

இந்த படங்களில் பெரிய கதாநாயகர்கள் இல்லாததால் நயன்தாராவுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயங்கவில்லை.

அதிக சம்பளம் வாங்குவதில் நயன்தாராவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்கி வந்த இவருக்கு தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பாக்மதி’ தெலுங்கு படத்துக்கு ரூ.2¼ கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி படங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள அனுஷ்கா சம்பளத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ள தீவிர முயற்சி எடுக்கிறார். ஆனாலும் இளம் ரசிகர்கள் நயன்தாராவுக்கு பெருமளவு இருப்பதால் அவரை முந்த முடியவில்லை.

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் நயன்தாராவும், அனுஷ்காவும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு வரி கட்டி வெள்ளையாக தரும்படி நிபந்தனை விதித்து இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.