நீதித்துறை மீது தமிழ் மக்கள் சந்தேகம் இளஞ்செழியன்!

வட மாகாணத்தில் கைது செய்யப்படுபவர்களை தெற்கிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துகின்றமை நீதித்துறை பற்றி தமிழ் மக்களிடையே நம்பிக்கையீனத்தை தோற்றுவிப்பதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள்வெட்டுக்கள் உட்பட சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். ‘இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்யப்படுகின்ற நபர், அவர் எப்பிரதேசத்தில் கைதுசெய்யப்படுகிறாரோ அவர் அப்பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது.

ஆனால், தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். ‘குறிப்பாக யுத்த காலத்தில் இவ்வாறு கொழும்பு நீதிமன்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக முற்படுத்தப்பட்டிருந்தமை ஏற்றுக்கொள்ள முடியுமாக உள்ளபோதும் தற்போது நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் 9 நீதிமன்றங்கள் இங்குள்ள போதும் மீண்டும் கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பவது தொடர்பாக வடமாகாணத்தில் எந்த நீதிமன்றங்களும் இல்லையா? என்ற கேள்வியும் எண்ணமும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 70 சதவீதமானவர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறன நிலையில் இங்குள்ள நீதிமன்றங்களில் இவ் வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையிலும் தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிநீதிமன்றங்களில் முற்படுத்துவதானது இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்தினையும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு ஆகுமெனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.