கருமையான முகம் ஜொலிக்க வேண்டுமா? ஆண்களுக்கான எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்!

முகம் கருமையடையாமல் இருக்க வேண்டுமானால், தினமும் சருமத்திற்கு ஏதேனும் ஒரு பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டும். அப்படி சருமத்தை தினமும் பராமரிக்க ஓர் சிறந்த வழி என்றால் அது ஸ்கரப் செய்வது தான்.

ஸ்கரப் செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை தக்க வைக்கலாம். பெண்களை விட ஆண்களின் முகத்தில் இதை பயன்படுத்துவதன் மூலம் பலன் பெறலாம்.

வாழைப்பழ ஸ்கரப்:

2 நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் அழுக்குகள் சேர்ந்து கருமையாக காட்சியளிப்பதைத் தவிர்க்கலாம்.

எலுமிச்சை ஸ்கரப்:

எலுமிச்சை ஸ்கரப் முகத்தை விட கை, கால்களுக்கு நல்லது. முகம் மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால், அங்கு அமிலம் நிறைந்த எலுமிச்சையைப் பயன்படுத்தினால், அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இந்த ஸ்கரப் செய்வதற்கு எலுமிச்சையை பாதியாக வெட்டி, சர்க்கரையில் தொட்டு கை, கால்களில் 5-7 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் கை, கால்களில் உள்ள கருமைகள் அகலும்.

தயிர் மற்றும் பப்பாளி ஸ்கரப்:

கனிந்த பப்பாளியை சிறிது மசித்து 1/2 கப் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 4 துளிகள் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 5-7 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் தேன் ஸ்கரப்:

2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடி மற்றும் ஓட்ஸ் பொடியுடன், தேன் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, கருமை அடையாமலும் இருக்கும்.

ஓட்ஸ் மற்றும் தக்காளி ஸ்கரப்:

ஓட்ஸ் பொடி, சர்க்கரை பவுடர் மற்றும் நன்கு கனிந்த தக்காளி பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சந்தனம் மற்றும் குங்குமப்பூ ஸ்கரப்:

2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள கருமை நீங்கி, பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.