இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” மட்டக்களப்பில்!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது   “எழுக தமிழ் பேரணி”   மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக  தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் உருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவை நேற்று மாலை கொழும்பு மன்றக்கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும் நிர்பந்தங்களாலும் அழுத்தங்களாலும் எமது மக்களின் நீதிக்கான பயணம் மழுங்கடிக்கப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக நிலவி வந்தது.

எனவே அதனைத்தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடொன்றின் அவசியம் உணரப்பட்டது.

அதனால்தான் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ். நகரில் “எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டது.

எனவே மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் வெளிக்கொண்டுவந்து அதற்கு தீர்வு காணும் நோக்கில் இரண்டாவது “எழுக தமிழ் பேரணியை ” எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடத்துவதற்கு எதிர்பார்த்துதள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.