கிண்ணியாவில் கர்ப்பிணிப் பெண் கொலை

கிண்ணியா – சூரங்கல் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளியலறையில் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கையும் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சூரங்கல் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளம் யுவதியொருவர் கடந்த மாதம் 20 ஆம் திகதி குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவர் குளியலறையில் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்ததாக யுவதியின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இந்த மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் பிரகாரம் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெறிக்கப்பட்டு யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, யுவதியின் கணவரைக் கைது செய்துள்ள கிண்ணியா பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.