கார் மீது லாரி மோதி விபத்து ; 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி – கரூர் அருகே பயங்கரம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலையில் உள்ள மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றி நாமக்கல்லுக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அதேபோல், கேரள மாநிலம் கொச்ச்சினில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரு காரில் திருச்சி வழியாக நாகூர் தர்ஹாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.

மணல் லாரி, குளித்தலை வழியாக முசிறி சென்ற போது, முன்னே சென்ற மாட்டுவண்டிகளை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது, எதிரே வந்த மணல் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த சம்பவத்தில் காரை ஒட்டிய டிரைவர் பாஸ்கர் என்பவரது தலை துண்டானது, மேலும் காரில் பயணித்த நஸிமா, ஆஷியா என்ற இரு இஸ்லாமிய பெண்கள் பலியானார்கள்.
மேலும் தனுஷா (17), முகம்மது ஷரிப் (31) ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் குளித்தலை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்த நிலையில், கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் குளித்தலை போலீஸார் தப்பி ஓடிய மணல் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த மூன்று பேரது உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஹாவிற்கு ஆண்டவனை பிரார்த்தனை செய்வதற்காக சென்றவர்கள் மீது மணல் லாரி மோதி விபத்திற்குள்ளான விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல மணல் லாரிகளினால் இப்பகுதியில் விபத்துகள் தொடர்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.