இப்படியும் கலவரம் ஏற்படுமா? குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் பலி

லிபியா நாட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் சபா என்ற பழங்குடியினர் வசிக்கும் நகர் அமைந்துள்ளது.

இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குரங்குக்கு சொந்தமான 3 பேர் சாலையில் சென்ற சிறுமிகள் மீது குரங்கை ஏவி விட்டுள்ளனர்.

சிறுமிகள் மீது ஏறிய குரங்கு, ஒருவரின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் தப்பி பிழைத்து தனது குடும்பத்தினரிடம் புகார் அளித்துள்ளார்.

சிறுமிகளுக்கு நேர்ந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஆயுதங்களை எடுத்துச்சென்று குரங்கை ஏவிய 3 பேரையும், குரங்கையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தங்களது இனத்தவர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உயிரிழந்தவர்களின் பகுதி மக்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு இதனைக்கட்டுப்படுத்த ராணுவ பீரங்கிகளும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன.

ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 50 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் பலியாகியுள்ள சம்பவம் சபா நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.