4 லட்சம் சிறுவர்களை தற்கொலை படைக்கு தயார் செய்துள்ள ஐ.எஸ் அமைப்பு

ஈராக் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் சிறுவர்களை மூளை சலவை செய்து தற்கொலை படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தயார் செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிகவும் பலமிக்க அமைப்பாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 லட்சம் சிறுவர்களை மூளை சலவை செய்து மனித வெடிகுண்டுகளாக மாற்றும் முயற்சியை ஐ.எஸ் அமைப்பு மேற்கொண்டு வந்துள்ளது.

இதேபோல், நகரில் உள்ள பாடசாலைகளின் கல்வி முறையைக் கூட ஐ.எஸ் அமைப்பினர் மாற்றி மாணவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இந்த பாடசாலை கல்வி திட்டங்களில் ‘வெடி குண்டு இணைக்கப்பட்ட உடைகளை எப்படி அணிவது, பெண்களை எப்படி பிணையக்கைதிகளாக பிடிப்பது, கூட்டத்தின் மீது தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது உள்ளிட்ட பல பயிற்சிகளை மட்டுமே’ வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சிறுவர்களை உடனடியாக இணங்கண்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது என மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.