ரூ.163 கோடிக்கு விற்பனையான கைக்கடிகாரம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

சுவிட்சர்லாந்து நாட்டில் பழைய கைக்கடிகாரம் ஒன்று ரூ.163 கோடிக்கு விற்பனையாகி முந்திய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் கடந்த சனிக்கிழமை அன்று கைக்கடிகாரங்களை ஏலத்தில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

லண்டன் நகரை சேர்ந்த ஃபிலிப் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான கடிகாரங்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.

இவற்றில் கடந்த 1941-ல் சுவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1943-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த Patek Philippe என்ற கைக்கடிகாரமும் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக கடிகாரத்தின் இயக்கத்தை அதனை பயன்படுத்தும் நபர் நிறுத்தும் வசதியும், அதில் திகதிகளை தெரிவிக்கும் வசதிகளை கொண்டுள்ள இக்கடிகாரம் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஜெனிவாவில் சுமார் 13 நிமிடங்கள் நடைபெற்ற ஏலத்தில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் இக்கடிகாரத்தை 11,002,000 பிராங்க்(163,44,06,505 இலங்கை ரூபாய்) விலைக்கு வாங்கியுள்ளார்.

இதன் மூலம், கைக்கடிகார வரிசையில் இதுவே முதல் முறையாக அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

மேலும், இதே நிகழ்ச்சியில் 177 கைக்கடிகாரங்கள் விற்பனை ஆனதாகவும், இதன் மூலம் 27.5 மில்லியன் டொலர் வருமானம் பெற்றுள்ளதாகவும் ஃபிலிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.