சிறுபான்மை மக்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்ட பிக்குவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களின் காணியில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ மேற்கொண்ட முயற்சியை தட்டிக்கேட்ட தமிழ் அதிகாரிளை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமன்றி, புலி முத்திரையும் குத்திய மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கு குறித்த பிக்கு முயற்சித்ததையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் கெவிலியாமடு கிராமசேவகர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிலர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது வெகுண்டெழுந்த குறித்த பிக்கு, பொலிஸார் முன்னிலையிலேயே அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தமிழ் மக்கள் அனைவரும் புலிகள் என குறிப்பிட்டு கூச்சலிட்டார்.

புத்த பெருமானின் அஹிம்சை போதனைகளை கடைப்பிடிக்கும் வழித்தோன்றல்களாக கருதப்படும் பிக்குகள் இவ்வாறு செயற்படுவது அனைத்து மக்கள் மத்தியிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச் சம்பவத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.