11வயது சிறுவனுக்கு டெங்கு நுளம்பால் நேர்ந்த அவலம்!!

கல்முனைப் பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் சனிக்கிழமை (12) இரவு உயிரிழந்துள்ள அதேவேளை, 59 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மத் சபீக் முஹம்மத் நுஷாக் (வயது 11) என்ற சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை தெற்கு மற்றும் வடக்குச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வைத்தியசாலைகளில் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலின் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு அவசர நடவடிக்கை எடுப்பதற்காக சாய்ந்தமருதுப் பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது.