இளைஞனின் மர்ம மரணம்! வீரவன்ச குடும்பத்தின் திக் திக் நிமிடங்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் கடந்த 26ம் திகதியன்று இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, உயிரிழந்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகனான விபுதி விஷ்வஜித் வீரவன்சவுடன் நெருங்கிய தொடர்புடைய நண்பர் என்பது தெரியவந்தது.

விமல் வீரவன்சவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் குறித்த இளைஞர் கடந்த 25ம் திகதியும் அங்கு சென்றுள்ளதுடன், அன்றிரவு அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
எவ்வாறாயினும் மறுநாள் கண்விழிக்காத குறித்த இளைஞனை, வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதும், ஏற்கனவே அந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஹோகந்தர தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சலாகே லஹிரு ஜனித் திசாநாயக்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் தனக்கும் தனது மகனுக்கும் எதிராக சில இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

அத்துடன் மரணம் தொடர்பில் சில இணையத்தளங்கள் வெளியிடுகின்ற செய்திகளினால் தனது சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விமல் வீரவன்சவின் மகளான விமாஷா வி்ஷ்வாதரி தாயுடன் சென்று சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் பெரும்பாலும் வீரவன்சவின் இன்னொரு முகத்தினை வெளி உலகத்திற்கு காட்டலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.