படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன்!- ஜனாதிபதி

தாம் நாட்டில் இருந்திருந்தால் ஊனமுற்ற படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதிருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மறைந்த சோபித தேரரின் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

ஒழுக்கத்துடன் போர்க் களத்தில் போரிட்ட படையினர் இன்று அரசியல் கைப்பாவைகளாக மாற்றமடைந்துள்ளமை வருத்தமளிக்கின்றது.

அப்பாவி படைவீரர்கள் அரசியல் பகடை காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்அப்பாவி படைவீரர்களுக்கு தெரியாது அவர்களை யார் வழிநடத்துகின்றார்கள் என்பது பற்றி.இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் அரசாங்கத்தை தாக்கி செய்தி வெளியிடுகின்றன.

எம்மை ஆட்சி பீடத்தில் ஏற்றிய தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு ஊடக அறிக்கை வெளியிடுகின்றனர்.எனக்குத் தெரிந்த வகையில் பொலிஸார் கை கால்களினால் தாக்குதல் நடத்தவில்லை.

தப்பிக்க முடியாத நிலையில் படையினர் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.நான் இந்தியாவில் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்தேன்.

நான் கொழும்பில் இருந்திருந்தால் படைவீரர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் நடத்த இடமளித்திருக்க மாட்டேன்.ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் ஏனைய குழப்பம் விளைவித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதித்திருப்பேன்.

கட்டடங்களை தாக்கி மதில்களை உடைத்திருந்தால் அதற்கு இடமளித்திருப்பேன்.நாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து அப்பாவி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதே இவர்களின் முயற்சியாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்..

எம்மை ஆட்சிப் பீடத்தில் ஏற்றியர்கள் தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.