6 வயதில், 1330 திருக்குறள்கள்… அசத்தும் காரைக்குடி மாணவி!

காரைக்குடி, அழகப்பா அகாடமியில் முதல் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் வைஷ்ணவி, திருவள்ளுவரின் அத்தனை (1330) குறள்களையும் அருவிபோல சொல்லி,
அனைவரையும் வியக்கவைக்கிறார். ‘எப்படி இவளால எல்லா குறளையும் படிக்க முடிஞ்சது’ என்று, வைஷ்ணவியின் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் வந்துபோகிறது வியப்பு. 10 குறள்கள் படிக்க, பெரிய  வகுப்பு மாணவர்களே தலையை உருட்டுவார்கள். ஆனால், முதல் வகுப்பிலேயே அனைத்துக் குறள்களையும் மனப்பாடமாகச் சொல்வதோடு, சுமார் 50 குறள்களுக்குத் தெளிவுரையும் சொல்கிறார். அதையே ஆங்கிலத்திலும் சொல்வதுதான் ஹைலைட்.
வைஷ்ணவிக்கு திருக்குறளை எப்படிப் பிடித்தது?
”அம்மாதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க, அவங்ககிட்டயே கேளுங்க” என்றார் மழலைக் குரலில் வைஷ்ணவி..
”முதல்ல, நான் சொல்லிக்கொடுத்ததையெல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டு சொன்னாங்க. அதனால, ரெண்டு வயசுலயே கடவுள் வாழ்த்து பத்து குறளையும் சொல்லிக்கொடுத்துட்டேன்.
அப்புறம், LKG முடிச்ச லீவுல மற்ற குறள்களையும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அதுல இருந்து ஒரு வருஷத்துக்குள்ள எல்லாக் குறளையும் மனப்பாடம் பண்ணிட்டாங்க.

 
கட்டாயப்படுத்தி சொல்லிக்கொடுக்கக் கூடாது. அவங்க ஃப்ரீ மைண்டா இருக்கணும். கலரிங் பண்ணும்போது… விளையாடும்போது சொல்லிக்கொடுத்தா, மனசுல ஈஸியா எடுத்துக்குவாங்க.
ஒரு அதிகாரத்தைத் தெளிவுபடுத்த, சின்னதா ஒரு கதை சொல்வேன், புரிஞ்சிக்குவாங்க. முதல்ல, ல,ள எழுத்து உச்சரிப்பை சரியா சொல்லிக்கொடுத்துட்டு, குறளை
ரெக்கார்டு பண்ணிப் போட்டுவிட்டுட்டா, மனப்பாடம் ஆகிடும். முதல் வார்த்தையை எடுத்துக்கொடுத்தா போதும் எந்தக் குறளா இருந்தாலும் சொல்லிடுவாங்க. நம்பர் சொன்னா, குறள்
சொல்ல பயிற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க” என்கிறார் அம்மா லதா, பெருமையாக.