ஐஸ்வர்யா ராயுடன் யாராவது நெருக்கமாக நடிக்க மறுப்பார்களா?: ரன்பிர் கபூர்

ஐஸ்வர்யா ராயுடன் காதல் காட்சிகளில் நடிக்க எந்த நடிகர் மாட்டேன் என்பார் என பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் படம் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் படம் மற்றும் ஐஸ்வர்யா ராய் பற்றி ரன்பிர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது சிறந்த அனுபவம். எந்த நடிகர் தான் அவருடன் காதல் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பார். என் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போகிறார் என்று தெரிந்து மகிழ்ந்தேன்.

ரன்பிருடன் எல்லாம் நடிக்க மாட்டேன் என ஐஸ்வர்யா ராய் கூறிவிடுவாரோ என நினைத்தேன். என் தந்தை இயக்கிய ஆ அப் லவ்ட் சலேன் படத்தில் ஐஸ்வர்யா நடித்தபோதில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள். அவருடன் அப்பொழுது நிறைய நேரம் செலிவிட்டுள்ளேன்.

சம வயது நடிகையுடன் நடித்தது போன்று தான் இருந்தது. ஐஸ்வர்யா ஒரு சீனியர் நடிகை என்ற உணர்வு எனக்கு வரவில்லை. அவர் பெரிய நடிகை என்பது போன்று நடந்து கொள்ளவும் இல்லை.

ஜிம் பாடி வைத்துக் கொண்டு குதிரை ஓட்ட, நடனம் ஆடத் தெரிந்தவர்கள் தான் நடிகர்கள் என்று மக்கள் தவறாக நினைத்துள்ளனர். உலக நடப்புகளை தெரிந்து கொண்டு அந்த அனுபவத்தை, அறிவை நடிப்பில் வெளிப்படுத்துபவர் தான் நடிகர்.