காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 258 புதுமண மக்கள் சைக்கிள் பேரணி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வரும் 7-ஆம் தேதி அங்குள்ள தனியார் அமைப்பு சார்பில் சமூக திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் பங்குபெறும் 258 மணமக்களும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் திருமண ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.

அதன்படி மணமக்கள் அனைவரும் குறித்த சமுதாய தலைவர்கள் புடைசூழ நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக சைக்கிளில் மணமகன் ஊர்வலம் நடத்த உள்ளனர்.

இது நகரத்தில் வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் முதல்படி என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன நெரிசல், காற்று மாசுபடுதல், ஆரோக்கியம் உள்ளிட்டவையில் பொதுமக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், குறித்த நிகழ்வில் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.