கணவனை கொன்று நாடகமாடிய பாசக்கார மனைவி: உறைய வைக்கும் பின்னணி காரணம்

இந்தியாவில் மனைவி ஒருவர் குடும்பத்தினர் உதவியுடன் கணவனை பாறையில் மோதி கொடூரமாக கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்த வரலக்ஷ்மி என்ற பெண்ணே, 38 லட்சம் காப்பீட்டு தொகைக்காக தனது கணவன் Nooka Rajuவை கொலை செய்துள்ளார்.

20 வருடத்திற்கு முன் திருமணமான குறித்த தம்பதிக்கு ஐந்து பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியுடன் அடிக்கடி சண்டை பிடித்து வந்துள்ளான்.

காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்த வரலக்ஷ்மி கணவன் பெயரில் 38 லட்சத்திற்கு காப்பீட்டு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ம் திகதி புறநகர் பகுதியில் Nooka Raju விபத்தில் சிக்கி இறந்ததாக வரலக்ஷ்மி நாடகமாடியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவத்தன்று கணவனுக்கு மது கொடுத்து போதையில் தனது குடும்பத்தினர் நான்கு பேருடன் வாடகை காரில் அழைத்துச் சென்று புறநகர் பகுதியில் வைத்து தலையை பாறையில் மோதி கொன்றதாக வரலக்ஷ்மி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் வரலக்ஷ்மி உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.