சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா: விரைவில் வீடு திரும்புகிறார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஐசியூவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நலமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிமுக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்படவே செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா ஐசியூவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர் இயல்பாக சுவாசிப்பதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.