உளுந்தே இல்லாமல் மொறு மொறு வடை!

பொதுவாகவே பண்டிகை நாட்களில் வடை செய்வது வழக்கம். ஆனால் உளுந்து வடை செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய பிரச்சினை உளுந்தை மணிக்கணக்கில் ஊற வைக்க வேண்டும் என்பது தான்.

அதனால் திடீர் முடிவெடுத்து உளுந்து வடை செய்வது நடக்கதாத காரியம். இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் வெறும் பத்தே நிமிடங்களில் உளுந்தே இல்லாமல் எப்படி உளுந்து வடை செய்வதென இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 1 கப்

மோர் – 1 கப்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – 1 கப்

இஞ்சி – 1 இன்ச் (துருவியது)

பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)

சீரகம் – 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து, அதில் 1 கப் மோரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் 1 கப் தண்ணீரையும் ஊற்றி, நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அந்த மாவு கவவையுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும்

மாவு சற்று கெட்டியாகத் ஆரம்பித்ததும், அதில் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அதனையடுத்து அதில் சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ,மாவு நன்கு வெந்து வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.

கையில் நீரைத் தொட்டு மாவை எடுத்தால் மாவு கையில் ஒட்டாமல் இருக்கும் பதத்துக்கு வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும்.

அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் அதில் சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும்.

அடுத்து கையில் எண்ணெய் தடவி, மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, லேசாக தட்டையாக தட்டி, நடுவே ஓட்டை போட்டு, ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொள்ள வேணடும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் மொறுமொறுப்பான மெதுவடை தயார்.