ரணிலின் கைதுக்கு எதிர்ப்பு வெளியிட்ட சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைதுக்கு சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவிற்கு (Wajira Abeywardana) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதே அவர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வஜிர அபேவர்தன, இன்று (23) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய தலைவர்கள் நாளை ஐக்கிய தேசிய கட்சி தமைமையகத்தில் பத்து மணிக்கு கூடவுள்ளனர்.

அப்போது தீர்க்கமான முடிவெடுப்பதோடு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, தற்போது அவர் விசாரணைகளின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.