கத்தரிக்காயில் சட்னி செய்யலாம் வாங்க!

பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவுக்கு இட்லி தோசை செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. ஆனால் அதற்கு தொட்டுக்கொள்ள வழக்கம் போல் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி தான்.

சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கத்தரிக்காய் வைத்து ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

பூண்டு – 8 பல்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

வரமிளகாய் – 6

கத்திரிக்காய் – 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 2 கொத்து

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – சிறிது தாளிப்பதற்கு

எண்ணெய் – 2 தே.கரண்டி

கடுகு – 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, கத்திரிக்காய் நன்கு வேகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதனுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.

பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்

அதனையடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.