பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி

தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக உணவுகளில் சுவையை அதிகரிப்பதில் சட்னி வகைகள் இன்றியடையாதது.

இட்லி, சோசைக்கு சட்னி சாப்பிடுபவர்களை விட சட்னிக்காகவே இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.

அப்படி சட்னி பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில் அசத்தல் சுவையில் இஞ்சி பூண்டு சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பூண்டு – 15

இஞ்சி – சிறிதளவு

தேங்காய் – ½ மூடி

கருவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 2

புளி – சிறிதளவு (ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு)

சீரகம் – 1 தே.கரண்டி

வெந்தயம் – ¼ தே.கரண்டி

கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணெய் – தாளிக்க

கடுகு – ¼ தே.கரண்டி

கடலைப் பருப்பு – ½ தே.கரண்டி

உளுந்தம் பருப்பு – ½ தே.கரண்டி

பெருங்காயம் – ¼ தே.கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை தோல் உரித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிட்டு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவேண்டும்.

பின்பு அதில் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கொத்தமல்லி விதைகளையும் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து நன்றாக கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.

இறுதியில் துருவிய தேங்காய் மற்றும் கழுவி வைத்த புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும்.

நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விட்டு, பின்னர் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து சட்னி உடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் இஞ்சி பூண்டு சட்னி தயார்.