ராஜஸ்தான் ஸ்டைல் பூண்டு சட்னி

நாம் வீட்டில் எந்த வகையான உணவு சமைத்தாலும், நமக்கு பெரிய தலைவலியாக இருப்பது அதற்கு ஏற்றால் போல் என்ன சமைப்பது என யோசிப்பது தான்.

ஒவ்வொரு வகையான உணவுகளையும், அதற்கு ஏற்றால் போன்று சட்னி செய்து சாப்பிட்டால் தான் சாப்பிடுவதற்கான மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அந்த வகையில், காலை வழக்கமாக செய்யும் தோசைக்கும் இட்லிக்கும் ராஜஸ்தானி பூண்டு சட்னி செய்யலாம். இதன் சுவையும் வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடிக்கும்.

அப்படியாயின், ராஜஸ்தானி பூண்டு சட்னி எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பூண்டு – 25 அல்லது 30 பல்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ½ டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எலுமிச்சை – ½ பழம்
கடுகு – ½ டீ ஸ்பூன்
சீரகம் – ½ டீ ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
செய்முறை
எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து விதைகள் இல்லாமல் சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

அதன்பின்னர், பூண்டு பற்களை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். உரித்த பூண்டு பற்களை வீட்டில் இருக்கும் அம்மி அல்லது உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும்.

உரல் இல்லாதவர்கள் உலர்ந்த மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். அதனை வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் மிளகாய் தூள், மற்றும் மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகிய பொருட்களை கலந்து கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விட்டு, வாணலியை அடுப்பில் சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடவும். கருவேப்பிலை இலை இலைகள், கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

அதில் கலந்து வைத்திருக்கும் கலவை கொட்டி அடிபிடிக்காமல் கிளறி விடவும். நன்றாக எண்ணெய் பிரிந்து வெந்து வரும் வரும் வரை வேகவிட்டு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

கஸ்தூரி மேத்தி இலைகளை கைகளால் கசக்கி சேர்த்தும் கிளறலாம். கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ராஜஸ்தானி பூண்டு சட்னி தயார்!