அடுப்பே இல்லாமல் இலங்கையின் நுங்கு பாயாசம்

‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். கோடைகாலங்களில் இந்த நுங்கு சாப்பிட்டால் அத உடலில் இருக்கும் சூட்டை அப்படியே இழுத்தெடுக்கும்.

இந்த நேரத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றத்துடனும் வைத்திருப்பது அவசியம். அதன்படி நுங்கு, இதற்கு சிறந்த உணவாக கருதப்படுகின்றது.

இலங்கையில் அதிக அளவில் நுங்கு விளைச்சல் இருக்கும். அதன்படி அடுப்பு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் எப்படி நுங்கு பாயாசம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
நுங்கு – 8 பீஸ்
காய்ச்சி ஆற வைத்த பால் – முக்கால் லிட்டர்
ஏலக்காய் பொடி
கற்கண்டு – 30 கிராம்
கண்டன்ஸ்டு மில்க் – 50 மில்லி
குங்குமப்பூ – 2 இலை
முந்திரி, பாதாம் நறுக்கியது – 3 ஸ்பூன்
ஊறவைத்த பாதாம் பிசின் – 4 ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் நுங்கையின் மேல் உள்ள தோல்களை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸியில் 5 நுங்குகளை சேர்த்து அரை டம்ளர் பால் விட்டு நன்கு மை போல பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பாதாம் பிசினை 1 மணி நேரத்துக்கு முன்பு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குங்குமப்பூவையும் 2 ஸ்பூன் தண்ணீரில் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு ஊறவிடுங்கள்.

மீதி இருக்கும் 3 நுங்குகளை பொடிப்பொடியாக நறுக்கிக் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு கற்கண்டையும் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் அரைத்த பேஸ்ட், நறுக்கிய நுங்கு துண்டுகள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து விட்டு பின் அதில் பொடித்த கற்கண்டு, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

கடைசியாக அதில் குங்குமப்பூ நீர் மற்றும் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்து கலந்தால் சுவையான ஜில்லுனு நுங்கு பாயசம் தயார். கடைகளில் சோடாக்களுக்கு அடிமையாகுவதை தவிர்த்து இதுபோன்ற இயற்கை பானம் அருந்தினால் ஆரோக்கியம் மேம்படும்.