“சீரியல்ல நடிக்கப் போறேன்னு சொன்னதும் சிலர் ‘சினிமாவுல இருந்துட்டு ஏன் இப்படி முடிவெடுத்தே’ன்னு கேட்டாங்க. ‘நான் ஏன் பண்ணக் கூடாது’ன்னு திருப்பிக் கேட்டப்ப அவங்ககிட்ட பதில் இல்ல. எனக்கு சினிமா, சீரியல், வெப் சீரிஸ் மூணுமே ஒண்ணுதான். டெலிவிஷன் ரொம்பவே பவர்ஃபுல் மீடியம். எதுல பண்ணினாலும் ஒரே புகழ்தான். அப்படியிருக்கிறப்ப நாம ஏன் தயங்கணும்? இந்த வாய்ப்பை நான் தேடிப் போகல… என்னைத் தேடி வந்ததுங்கிறப்ப அதை ஓகே பண்ணுறதுல தப்பு இல்லைன்னு தோணுச்சு’’ என்ற அபி நக்ஷத்ராவின் பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி.
`அயலி’ வெப் சீரிஸின் மூலம் மக்களுக்குப் பரிச்சயமானவர், தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் `அன்னம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்திருக்கிறார். சீரியல், வெப் சீரிஸ், படம் எனத் தொடர்ந்து பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருப்பவரை ஷூட்டிங் இடைவேளையில் சந்தித்தோம்.
‘‘ `அயலி’க்குப் பிறகு என் லைஃப்ல நிறைய மேஜிக் நடந்துடுச்சு. எங்க போனாலும் `அயலி’ தமிழ்ச்செல்வியா மக்கள் கொண்டாடுறாங்க. அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்கிறாங்க. அந்த சீரிஸ் பார்த்துதான் சேனலில் இருந்து இந்த சீரியலுக்காகக் கேட்டாங்க. டெஸ்ட் ஷூட் பண்ணுனப்ப பொருத்தமா இருக்குன்னு சொன்னாங்க. இதுதான் லீடாகப் பண்ணுற முதல் சீரியல்ங்கிறதனால ரொம்ப பொறுப்போட இருந்தேன். அன்னம் எப்படி இருப்பாங்கன்னு ஒவ்வொண்ணும் பார்த்துப் பார்த்துப் பண்ணுவேன். சீரியல், சினிமா, வெப் சீரிஸ்னு ஒவ்வொண்ணுல இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துக்கிறேன்’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.