மன்னார் நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்

கைதான 7 சந்தேக நபர்களில் முன்னதாக ஐவர் ஆள் அடையாள அணிவகுப்புக்கு முற்படுத்தப்பட்டனர். ஏனைய இருவருக்கு ஆள் அடையாள அணிவகுப்பு இன்று நடத்தப்படவிருந்த நிலையில் அடையாளத்தை காண்பிப்பதற்காக வருகை தரவிருந்த இருவரும் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகவில்லை.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின்போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்கலாக 7 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர்.

இந்த 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (10) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இன்று நடத்தப்பட்ட விசாரணைகளின்போது நீதவான் 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.