மட்டக்களப்பு கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (04) அதிகாலை தோராயமாக 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலதிக சிகிச்சை
குறித்த இளைஞன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
மட்டக்களப்பு வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.