யாழில் வெளிநாட்டு முகவர்களை நம்பி ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டரை கோடி ரூபாய் மோசடி
யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.