தமிழகத்தில் குடிநீர் இல்லை.. ஆனால் டாஸ்மாக் தண்ணீருக்கு பஞ்சமில்லை – அண்ணாமலை பேச்சு!

அண்ணாமலை பாதயாத்திரை
பாஜக மாநில தலைவரான அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கினார். நேற்று மாலை அவர் அக்ரஹாரம் தெருவுக்கு வந்தபோது அங்குள்ள தனியார் தொடக்கப்பள்ளிக்கு சென்றார்.

அங்கு ஆசிரியர்களை பார்த்து கும்பிட்டு, ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர் புதிய பஸ் நிலையம், மணிக்கூண்டு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் வழியாக கிருஷ்ணாபுரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

டாஸ்மாக் தண்ணீர்
இந்நிலையில், தொண்டர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை, ஆனால் டாஸ்மாக்கில் வற்றாமல் டாஸ்மாக் தண்ணீர் விற்கப்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மத்தை வேர் அறுப்பேன் என்று கூறுகிறார்.

அவரது தாத்தா கருணாநிதியே இதுகுறித்து பேசி தோல்வி அடைந்துள்ளார். இந்தியாவில் 5 வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று பல்வேறு தேர்தல்கள் நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டுவர இருக்கிறோம்” என்று கூறினார்.