நாடு முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது சுகாதார பரிசோதகர்கள்

நாடு முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக சுமார் 3,200 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமக சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

விசேடமாக பண்டிகை காலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் அவற்றுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் ஆராயப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற்றால், அவற்றை 011 263 5675 என்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.