தமிழ் வார்த்தை என்பதற்காக வரி விலக்கு அளிக்க முடியாது – விக்ரம் படத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஐ’. இதில், விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஐ’ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. தமிழில் ‘ஐ’ என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்கான சலுகையாக அரசு கேளிக்கை வரி விலக்கை அறிவித்தது. அந்த சலுகையை உரிமையாக கோர முடியாது. நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும். பெயரில் தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காகவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.