தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளால் குழப்பமடையும் மஹிந்த

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வது தாம் அல்ல, ஜனாதிபதி மற்றும் சட்ட சபையே தெரிவுசெய்வதுடன், தலைசிறந்த அதிகாரி ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் என தான் நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்று சமூக பொலிஸ் சேவையின் தேவை வலுவாக உணரப்படும் காலமாகும். ஆனால், பொலிஸ் துறையை சேர்ந்தவர்கள் இந்த நாட்களில் எப்போதும் என்னை அழைத்து, புதிய பொலிஸ் மா அதிபருக்கு ஒப்புதல் அளித்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள்.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பது நான் அல்ல. அரசியலமைப்பு சபையாகும். ஜனாதிபதி ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்து அதை அரசியலமைப்பு சபைக்கு அனுப்புவார். இல்லை என்றால் தற்போது இருக்கும் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்து நீடிக்கப்படுவார்.

ஜனாதிபதி ஒரு மோசமான நபரை பொலிஸ் மா அதிபர் ஆக்குவார் என நான் நினைக்கவில்லை.

குற்றவாளிகளுடன் தொடர்பில்லாத, சட்டம் ஒழுங்கை நன்கு பேணக்கூடிய நல்ல அதிகாரியை ஜனாதிபதி நாட்டுக்கு வழங்குவார். எனவே ஏதாவது பெயர்கள் வெளிவந்தவுடன் எங்களிடம் பேச பயப்பட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.