கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்

ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது நம் கண்கள் தான். அதனால் மற்ற உறுப்புகளை காட்டிலும் கண்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆனால் இன்றைய காலத்தில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. இதற்கு காரணம் நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்வது, கைபேசியை அதிக நேரம் பார்ப்பது போன்றவை ஆகும்.

இவை அனைத்திற்கும் காரணம் கண்களுக்கு போதுமான சத்துகள் இல்லாமல், கண்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒரு சிலர் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல், மிகவும் குறைந்த அளவில் குடிக்கின்றனர். இதனால் உடலில் வறட்சி ஏற்படுவதோடு, கண்களிலும் வறட்சி ஏற்பட்டு, கண்கள் வலுவிழந்து விடுகிறது. இந்த பிரச்னையை தவிர்க்க நாம் ஊட்டச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

எனவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஊட்டச்சத்துகள் நிறைந்த கண்களுக்கு சக்தியை கொடுக்கும் சில உணவுகளை இப்போது பார்க்கலாம்.

பச்சை காய்கறிகள்
கண்களின் ஆரோக்கியத்திற்கான மிகச் சிறந்த உணவு பச்சை காய்கறிள் மற்றும் கீரைகள் ஆகும். அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரை மற்றும் பொன்னாங்கண்ணிக்கீரைகளில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் அதிகம் காணப்படுகின்றன. எனவே இந்த கீரைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது கண்களின் பார்வை திறனை அதிகரிக்கும்.

கேரட்
இதில் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளதால் கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பொதுவாக கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

அதனால் கேரட்டை பொரியலாகவோ, பச்சையாகவோ, ஜூஸாகவோ, சாலட் ஆகவோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு வகையில் சாப்பிடுவது நல்லது.

சிட்ரஸ் வகை பழங்கள்
திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுவதால் கண்களின் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொல்வதற்கு உதவுகிறது.

இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் கண் குறைபாடுகள் வராமல் காத்துக்கொள்ளலாம். இவை மட்டுமின்றி ஆரஞ்சு நிற பழங்கள் அனைத்தும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.

பூண்டு, வெங்காயம்
பூண்டு, வெங்காயம் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுதாதயோன் என்னும் பொருள் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் சரியாவதாக கூறப்படுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு
இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களில் ஏற்படும் விழி புள்ளி சிதைவு பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே கண் விழி புள்ளி சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிழங்கை சாப்பிடுவது நல்லது.

பால் பொருட்கள்
பெரும்பாலும் உடலில் வைட்டமின் ஏ குறைவினால் தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது. பால், வெண்ணெய், நெய், சீஸ், க்ரீம் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

பழங்கள்
சீத்தாப்பழம், மாம்பழம் , கொய்யா, பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இந்தப் பழங்களை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள், கண் புரை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

பருப்பு மற்றும் விதைகள்
வால்நட் , பாதாம், பிஸ்தா, நிலக்கடலை உள்ளிட்ட கொட்டை வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, வைட்டமின் ஏ போன்ற சத்துகள் உள்ளன.

இது கண் பார்வையை தெளிவுபெற செய்ய மிகவும் உதவுகிறது. எனவே கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பருப்பு வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

மீன்கள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் நிரம்பியுள்ளன. இது உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியதாகும். கண்களில் வறட்சித் தன்மை வராமல் பாதுகாத்துக் கொள்ளவும், அதுமட்டுமின்றி கண்புரை நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ளவும் மீன்களில் உள்ள இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு உதவுகிறது. மீன்களை சாப்பிடுவதில் விருப்பம் இல்லாதவர்கள் மீன் எண்ணெய் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

முட்டை
முட்டையில் நமது கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே உங்கள் கண்களின் பார்வை திறனை அதிகரிக்க முட்டையை உணவோடு சேர்த்து அவ்வப்போது சாப்பிடுவது மிகச்சிறந்த ஒன்றாகும்.

தண்ணீர்
நமது ஒட்டுமொத்த உடலும் இயங்குவதற்கு தண்ணீர் என்பது மிக அத்தியாவசியமானது. தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். கண்களில் ஈரப்பதம் குறைவது தான் கண்கள் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே உங்கள் கண்களில் ஈரப்பதத்தை சரியான அளவில் வைத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.