இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வது நிறுத்தப்படுகின்றது!

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தடை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (19.11.2022) “ஓமானில் மனித கடத்தலில் சிக்கியவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேட்ட கேள்விக்கு” பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சுற்றுலா விசாவில் வெளிநாட்டிற்கு செல்லல்

மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியுடன் அல்ல.

அவர்கள் துபாய் அல்லது வேறு நாட்டிற்குச் சென்று அங்கிருந்து ஓமனுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். தற்போது, ​​நாங்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பப்படும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.