காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட ஹன்சிகா

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. ‘சின்ன குஷ்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மஹா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இதில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆர்.கண்ணன் எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணன் காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.