மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்கமையால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). திருப்பூரில் உள்ள சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அதன் பின்னர் சமூக வலைதளமான டிக்- டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்தார். இதனை அமிர்தலிங்கம் கண்டித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் அறிமுகமான நபர்களுடன் சென்னைக்கு சென்று சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். இதற்கு அமிர்தலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனையும் மீறி சித்ரா சென்னையில் தங்கியிருந்து சினிமாவில் நடித்து வந்துள்ளார். இந்தநிலையில் மூத்த மகள் திருமணத்திற்காக கடந்த வாரம் சென்னையில் இருந்து சித்ரா திருப்பூருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட சித்ரா, திருமணமான தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் மகள்கள், 2பேரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். அதன் பின்னர் சித்ராவை அவரது வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாக அமிர்தலிங்கம் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கழுத்தில் காயங்களுடன் சித்ரா பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமிர்தலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்ரா சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் ஏற்பட்ட தகராறில் அமிர்தலிங்கம் துப்பட்டாவால் சித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அமிர்தலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.