முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதலாம் திகதி முதல் நடைமுறை
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு பொருட்கள், குறைவடைந்துள்ள புதிய விலையில் உணவக உரிமையாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதன் பயன், கிராம மட்டத்தில் உள்ள மக்களை சென்றடைவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

பத்து சதவீதத்தால் குறையும்
முதலாம் திகதி முதல் பல உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்ட கோழி இறைச்சி மற்றும் மீன் என்பவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கமைய உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும்.

அதேபோன்று மொத்த சந்தையில் குறைவடைந்துள்ள விலைக்கு அமைய கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் பொருட்களின் விலையை குறைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அசேல சம்பத் மேலும் குறிப்பிட்டார்.