பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் மகத்

மங்கத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் பிரபலமடைந்தவர் மஹத் ராகவேந்திரா. இவர் தற்போது சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘டபுள் எக்ஸ்எல்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இப்படம் குறித்து மஹத் ராகவேந்திரா கூறியதாவது, ”சினிமா என்பது, பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக இந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது. சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி.

நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம்.

இதில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குனர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்” என்றார். ‘டபுள் எக்ஸ்எல்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரைக்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.