திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா இன்று ஆரம்பம்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 7 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா, இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி காப்பு கட்டுதல் நடந்தது.

அதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தன.

விழாவையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெறும். தினமும் சண்முகர் வெள்ளை, பச்சை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதேபோல தினமும் மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30-ந் தேதி சூரசம்ஹார லீலையும், 31-ந் தேதி சஷ்டி தேரோட்டமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

கந்த சஷ்டி விழாவையொட்டி மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகள், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருப்பார்கள். இதற்காக தீபாவளி திருநாளான நேற்று பக்தர்கள் கோவிலில் இடம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலை சுற்றி உள்ள மண்டபங்களிலும் பக்தர்கள் தங்கி விரதம் தொடங்கினர். இந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் தினை மாவு, எலுமிச்சம் சாறு, பால் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. கோவிலில் ஆங்காங்கே பெரிய அளவிலான டி.வி. வைக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை, உற்சவர் சன்னதியில் பூஜைகள் உள்ளிட்ட கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.