சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் ( தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடை பெறும். அதே போல் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தீபாராதனை காட்டுவார். 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல், அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள்நடைபெறும். இந்த பூஜைகள் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். முன்னதாக நடப்பு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருடத்திற்கு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களில் மேல்சாந்தியாக சேவையாற்ற புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் 18-ந் தேதி காலை சன்னிதானத்தில் நடைபெறும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரில் ஒருவர் வீதம் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு புதிய மேல்சாந்திகளை, குலுக்கல் மூலம் தேர்வு செய்ய, பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் உத்தரவின் படி, பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்த கிருத்தி கேஷ் வர்மா என்ற சிறுவனும், பவுர்ணமி.ஜி. வர்மா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் நிலக்கல்லில் பக்தர்களின் வசதிக்காக உடனடி தரிசன முன் பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

கேரள அரசின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டு உள்ளது. கொரோனா தொடர்பான மற்ற கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி கோவில் நடை மீண்டும் 24-ந் தேதி மாலையில் திறக்கப்படும். 25-ந் தேதி ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்று இரவு நடை அடைக்கப்படும். பின்னர் நடப்பாண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும்.