பெண் ஒருவரின் கண்களில் இருந்து எடுக்கப்பட்ட 23 காண்டாக்ட் லென்ஸ்

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் கண்ணிலிருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை நீக்கியுள்ளார். ஒவ்வொரு இரவும் அவர் தனது கண்ணில் இருந்து லென்ஸை எடுக்க மறுத்து, பின் மீண்டும் காலையில் புதிதாக ஒன்றை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை அந்த மருத்துவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ”கண்ணில் லென்ஸ் வைத்துக்கொண்டு இரவில் தூங்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த நபர் தொடர்ந்து 23 நாட்கள் தினமும் இரவில் கண்ணில் இருந்து லென்ஸை எடுக்க மறுத்து, பின் மீண்டும் காலையில் புதிதாக காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார். மருத்துவர், அவரது கண்ணிலிருந்து அனைத்து லென்ஸ்களையும் எடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு மாத அளவில் கண் இமைகளின் கீழ் தங்கி ஒன்றாக சேர்ந்த லென்ஸ்களை, மெல்லிய மருத்து உபகரண கருவிக் கொண்டு பிரித்து, பின் அவைகளை வெளியில் எடுத்துள்ளார் மருத்துவர்.

புற ஊதா கதிர்களிலிருந்து கண்களை பாதுகாப்பதற்காக வெளிர் நீல நிறத்தில் இருக்கும் காண்டக்ட் லென்ஸில், புளோரஸ் என்னும் வேதிப்பொருளை பயன்படுத்தியதால், அது பச்சை நிறமாக மாறியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.