ரஷ்யாவில் நீடிக்கும் போர் காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்படலாம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது, அத்துடன் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்து, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவுக்கு நிலைமை சிக்கலாகி உள்ளது.

ஆயுதங்கள் வாங்க நிதி சேமிப்பு
இந்நிலையில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனமான GazettaRu படி தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்கள் ரத்து செய்யலாமா என ரஷ்ய அரசு அதிகாரிகள் விவாதிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதேசமயம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கலுகா மற்றும் நிஷ்னி நோவ்கோரோட் ஆகிய நகரங்களின் உள்ளூர் அதிகாரிகள் அணிதிரட்ட பட்டவர்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்கு பட்ஜெட் பணத்தை சேமிக்க புத்தாண்டு நிகழ்வுகளை ரத்து செய்யலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் சில ரஷ்ய நகரங்கள் விழாக்களை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.