சீனாவுடன் இணைந்து இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் ரஷ்யா!

ரஷ்யா, சீனா இராணுவத்துடன் இணைந்து ஒரு வார காலம் நீளும் இராணுவ பயிற்சி முகாமை திட்டமிட்டபடி துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மிகப் பெரிய பயிற்சி திட்டங்களை ரஷ்யா முன்னெடுக்கும் என கூறப்படுகின்றது.

செப்டம்பர் 7ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ பயிற்சியில் ரஷ்யா சார்பில் 50,000 வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்படுகின்றது. அத்துடன் 140 போர் விமானங்கள், 60 போர் கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதங்கள் பிரிவும் ஈடுபடுத்தப்பட உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முகாமில் முன்னாள் சோவியத் நாடுகளும், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா மற்றும் சிரியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பங்கேற்க உள்ளன.

ரஷ்யா – சீனாவின் நெருக்கம்

அதேவேளை அமெரிக்காவுடன் இணக்கமாக இல்லாத ரஷ்யாவும் சீனாவும் சமீப காலமாக மிகவும் நெருங்கி வருவதாகவே கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்த போது சீனா கருத்து தெரிவிக்க மறுத்திருந்தது.

அத்துடன் நேட்டோ விரிவாக்கத்தை ஆதரிப்பதன் மூலமும் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமும் அமெரிக்கா மோதலை தூண்ட முக்கிய காரணியாக செயல்பட்டது என்றும் சீனா குற்றஞ்சாட்டியது.

நான்சி பெலோசி விவகாரம்

இதற்கு கைமாறாக தைவான் தொடர்பில் நான்சி பெலோசி விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்திருந்தது.

மேலும், உக்ரைன் மற்றும் தைவானுக்கான அமெரிக்க ஆதரவை ஒப்பிட்டுப் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin ), இவை இரண்டும் உலகளாவிய உறுதியற்ற தன்மையைத் தூண்டுவதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதி எனவும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.