சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அதன்பின்னர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என்று பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இவர் நடித்திருந்த லைகர் படம் நேற்று வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தை பார்க்காமல் புறக்கணியுங்கள் என்று வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆனது. அமீர்கானின் லால்சிங் சத்தா படத்துக்கு ஆதரவாக விஜய் தேவரகொண்டா பேசியதால் லைகர் படத்தை எதிர்த்தனர்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரு படத்துக்கு ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்கிய அவர், லைகர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.25 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிற மொழிகளிலும் தனது படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதிக சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.