தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை!

வேலூர் சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. முதல் தவணை 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி போன்றவை இந்த முகாம்களில் செலுத்தப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் 96.99 சதவீதம், 2-வது டோஸ் 89.5 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். 3.50 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதனை இலக்காக கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தண்ணிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது. முதல் தவணை 102.4 சதவீதமும், 2-வது தவணை 109.5 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் இருந்தது. அதற்கு பிறகு சமூக ஆர்வலர்களை கூட்டி கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கபட்டது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் தன்னிறைவு பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று 952 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இன்று நடைபெறும் முகாமில் இந்த தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க இருக்கிறோம். அப்போது கோவை, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் குறித்தும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தேவைப்படுகிறது. இது குறித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.

மேலும் தடுப்பூசி தேவை குறித்து தெரிவிக்க இருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. ஒரு சிலர் மருந்து இல்லை என கற்பனை கதையை சொல்லி வருகின்றனர். ஒரு சில இடங்களில் 4 வகை மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக அளவில் அந்த மருந்துக்கான தேவை அதிகமாக இருந்ததால் அந்த நிலை இருந்தது. தற்போது அதுவும் சரியாகி விட்டது. காப்பீடு திட்டம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் போதுமான நிதி உள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை என கூறி பொதுமக்களை வெளியே அனுப்புவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், நர்சுகள், டெக்னீசியங்கள் உட்பட 4,308 காலி பணியிடங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பு இல்லை. விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 24 மணி நேரமும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கேரளா எல்லையில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 85 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்துவதற்காக பாலிகிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும். அதனை பார்த்து பொதுமக்கள் சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.

அமைச்சர் துரைமுருகன் தொகுதியான காட்பாடியில் ரூ.30 கோடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு அடிக்கல் நாட்டப்படும். மேலும் பழைய அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தும் பணி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ.மேயர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.