பழக்கேசரி செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்

சர்க்கரை – 1 கப்

பழத்துண்டுகள் – 1 1/2 கப்

நெய் – விருப்பத்திற்கேற்ப

முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை – விருப்பத்திற்கேற்ப

ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

செய்முறை:

பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ரவையை கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை கொட்டிக் கிளறவும். ரவா வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து அதில் ஏலக்காய்த் தூள், கேசரி பவுடரை சேர்த்து கிளறவும். பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும். இப்போது சூப்பரான பழக்கேசரி ரெடி. இனிப்பு சற்று கூடுதலாக வேண்டுமெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்கலாம்.