சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகளில் இருந்து வெளிவரும் மர்மங்கள்

சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் பல மர்மங்களை வெளிக்கொணர்ந்துகொண்டு இருக்கின்றன.

கடந்த சில வாரங்களில் பனி உருகி இரண்டு எலும்புக்கூடுகளையும் விபத்துக்குள்ளான விமானம் ஒன்றையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

ஜெர்மாட் என்ற இடத்தில் மலையேறச் சென்ற ஒருவர் மம்மியாக்கப்பட்ட ஒரு உடலைக் கண்டுபிடித்துள்ள நிலையில், உயிரிழந்த அந்த நபர் அணிந்திருந்த உடையை வைத்துப் பார்க்கும்போது, அந்த உடல் 1980களிலிருந்தே அந்தப் பகுதியிலுள்ள பனியில் மறைந்து கிடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மலைகளில் பனி உருகுவதும், இப்படி உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதும் புதிய விடயம் அல்ல என்றாலும், சமீபத்தில் நிகழ்ந்துள்ள கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால், இப்போது நிலவும் அதீத வெப்பம் இருப்பது முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் தான் பனி உருகி இப்படி மறைந்துகிடக்கும் விடயங்கள் வெளியாகும் என்கிறார் சூரிச் பல்கலைக்கழக அறிவியலாளர் ஒருவர்.

இதற்கிடையில், 1920களிலிருந்து மலையேற்றத்துக்குச் சென்ற நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதால், இப்போது கிடைத்துள்ள உடல்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு எளிதல்ல.

ஆகவே, அந்த உடல்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.