காலி முகத்திடல் போராட்டகளத்தின் மற்றுமோர் முக்கிய செயற்பாட்டாளர் கைது!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக கைது
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தில் ஆரம்ப நாள் தொடக்கம் செயற்பட்டு வந்த முன்னணி செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தெரணியகலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேசிய பிக்கு முன்னணியின் தேரர் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தானிஷ் அலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

என்ற போதும் ரணில் ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை தமது போராட்டம் ஓயாது என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி நாளைய தினம் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைவரும் தமது ஆதரவினை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.