விருதுகளை அள்ளும் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன.

சமீபத்தில் இப்படத்திற்காக 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்தன. சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார்

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விழாவில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி 12 வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகியுள்ளது.