புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விக்ரம் வேதா பட இயக்குனர்

விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைமில் ஜூன் 17-ந் தேதி முதல் வெளியாகும் இத்தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர் – காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், “இந்த தொடரின் கருவை மட்டும் தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார்.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்த தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்த தொடர் முதலில் இந்திய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தத் தொடரின் கதையை திரைப்படத்திற்கு எழுதுவது போல் வில்லன், கதாநாயகன், கதாநாயகி என எழுதவில்லை. எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஒரு புள்ளியில் கதாபாத்திரங்களை கடந்து கதை நிகழும் நகரம் கூட கதாபாத்திரமாக மாறியது. இதை படமாக எடுக்க வேண்டுமென்றால் ஏழு எட்டு மணி நேரம் தேவைப்படும். அதனால் அதனை எழுதி தனியாக வைத்து விட்டோம். அதனை அமேசான் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ எனும் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட வலைத்தளத் தொடாராக உருவாக்கியிருக்கிறது” என்றார்.